காலவரையறையின்றி மூடப்பட்டிருந்த தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை நாளையதினம் (19) திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளையிலிருந்து தினமும் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு திறக்கப்பட்டிருந்தாலும், சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை அணுக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தரும் அனைவரும் தொற்றுநீக்கம் செய்யப்படுவதோடு, கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அத்தோடு முகக் கவசங்களை அவசியம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னராக இன்று தொற்றுநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
முகக் கவசங்கள் இல்லாது, பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தரும் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தினமும் மாலை 6.00 மணிக்கு வியாபார நடவடிக்கைகள் முடிவடைந்ததும், தொற்றுநீக்கம் செய்யப்பட்டு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Add new comment