இலங்கை பொருளாதார நிபுணரும் கொடையாளருமான காமினி கொரயாவினால் தோற்றுவிக்கப்பட்ட காமினி கொரயா நிதியம் ஒழுங்கு செய்திருக்கும் ‘ஃபிரீடா கொரயா’ விருதுகள் 2023 விருது வழங்கும் விழா இன்று (15 ) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஜெஸ்மின் அரங்கில் பி.ப. 02 மணி முதல் நடைபெறவுள்ளது.
காமினி கொரயா நிதியத்தின் தலைவரான கலாநிதி லொயிட் பெர்னாண்டோவின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சுனேத்ரா பண்டாரநாயக்க கலந்துகொண்டு உரையாற்றுவார்.
தமது சொந்த முயற்சியாலும், சவால்களை சந்திக்கும் திறனுடனும் வாழ்க்கையில் முன்னேறி தொழில் முயற்சியாளர்களாகவும் ஏனைய பெண்களுக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்கக்கூடிய சாதாரண மற்றும் நடுத்தர வகுப்பு பெண்கள் மத்தியிலேயே இப்போட்டி நடத்தப்பட்டது.
இப் போட்டியில் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட மகளிருக்கு பணப்பரிசில்கள், விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
இப் பெண்களை நேரில் சந்தித்து தகவல்களைத் திரட்டி போட்டிக்கு கட்டுரைகளை அனுப்பிய எழுத்தாளர்களுக்கும் பரிசில்களும் விருதுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒரு போட்டியில் எழுத்தாளர்களும் கௌரவிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். இவ்வகையில் மொத்தமாக 54 பேர் இதில், கௌரவிக்கப்படவுள்ளனர். லேக் ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களும் இவ்விருதை பெறவுள்ளனர்.
ஒவ்வொரு மாகாணத்திலும் மூன்று பெண்கள், மூன்று எழுத்தாளர்கள் என்பதாக வெற்றியாளர்கள் இப்போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கைச் சேர்ந்த சாதனைப் பெண்களும் இவர்களில் அடங்கியுள்ளனர். சாதனைப் பெண்களைக் கண்டறிவதற்காக எழுத்தாளர்கள் திரட்டிய தகவல்கள் பின்னர் கொள்கை அறிக்கையாகத் தயாரிக்கப்படவுள்ளது. சாதாரண மற்றும் நடுத்தர வகுப்பு பெண்களின் வறுமை நிலையை போக்குவதற்காக பணியாற்றும் அரசின் கொள்கை வகுப்பாளர்களின் பார்வைக்காக, இந்த கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என இவ்விருது திட்டத்தின் முகாமையாளர் ஷிராணி தெரிவித்துள்ளார்.