ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தெரிவிக்கப்படும் பெயர்களில் ஜனாதிபதி ரணிலுடன் ஈடு கொடுக்க எவராலும் முடியாதென, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன எம்பி தெரிவித்துள்ளார். சர்வதேசத்தை வெற்றி கொண்டு இலங்கையைக் கட்டியெழுப்பக் கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவராக வருவதற்கு உரிய தகைமை தேவைப்படுவது போன்று, நாட்டை ஆட்சி செய்வதற்கும் நாட்டின் தலைவராவதற்குமான தகைமை மிகவும் அவசியமென குறிப்பிட்டுள்ள அவர், அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கான தகைமைகளை கொண்டவரென்றும் அவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது அவசியம் என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது. அந்த மாநாட்டில் பங்கேற்ற அனைத்து ஆதரவாளர்களும் அந்த யோசனைக்கு ஏகமனதான இணக்கத்தை தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்