தபால் சேவை, கூரியர் மற்றும் பார்சல் முறைகள் மூலம் இந்தியாவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
இவ்வாறான அதிகரிப்பு போதைப்பொருள் கடத்தலில் சமீபத்திய வருடங்களில் ஏற்பட்டுள்ளதோடு அதிநவீன ட்ரோன்களைப் பயன்படுத்தி பஞ்சாப்புக்குள் ஹெரோய்ன் கடத்தப்படுவதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது
இந்தியாவிற்குள் போதைப்பொருட்களைக் கடத்தி வரவென பாரம்பரிய தரைவழிகள் 30 சதவீதம் தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இங்கு வந்து சேரும் போதைப்பொருட்களின் அளவை நோக்கும் போது அவை திகைக்க வைப்பதாக உள்ளன என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது.
இந்தியாவுக்குள் கடத்திவரப்படும் ஹெரோயின் போதைப்பொருளின் அளவானது உள்நாட்டினதும் சர்வதேசத்தினதும் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியனவாக விளங்குகின்றன. இவ்வருடத்தின் ஆரம்பப்பகுதியில் கேரள கடற்கரையில் கைப்பற்றப்பட்ட 12 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான 2500 கிலோ கிராம் ஐ.எஸ் போதைப்பொருள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
ஒரு தடவையில் இவ்வளவு தொகை போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்திவர முயற்சிக்கப்பட்டுள்ளதென்றால் ஒரு வருடத்தில் எவ்வளவு தொகைப் போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வந்து சேரும் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
வட கிழக்கு மாநிலங்களான மணிப்பூத், மிசோரம் மற்றும் நாகலாந்து போன்றனவும் அபின், ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருள் குற்றச்செயல்களின் முக்கிய மையங்களாக மாறிவருகின்றன. சில மருந்துப்பொருட்கள் மருத்துவ நோக்கங்களுக்காக அன்றி போதைக்கான மாத்திரைகளாகப் பயன்படுத்தப்படுவதும் சவால்மிக்கதாக தோற்றம் பெற்றுள்ளன.
அதனால் போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு நிலவிவருதாகக் குறிப்பிட்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு, இவற்றை ஒழிப்பதற்கான போராட்டத்தை நாட்டின் நலன்களையும் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி ஒருங்கிணைந்த முயற்சியாக முன்னெடுப்பது அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.