தே.மு.தி.க தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை மிக மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்துக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
தொண்டர்கள், ரசிகர்களால் கப்டன் என அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் அரசியலிலும் தடம் பதித்தவர். தி.மு.கவை பின்தள்ளிவிட்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே எதிர்த்தார். அவர் நினைத்திருந்தால் கூட்டணிக் கட்சியை எதிர்க்காமல் மக்களுக்கு குரல் கொடுக்காமல் அடுத்தடுத்த நிலைகளை அடைந்திருக்க முடியும். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதையே இலக்காகக் கொண்டு பணியாற்றியவர் அவர். அதனால் அவர் எந்தவித சமரசங்களுக்கும் இடம்தரவில்லை.
விஜயகாந்த் பல ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் அவ்வபோது வெளிநாடுகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்துக்கு நீரிழிவு நோய், தைேராய்ட், கல்லீரல் பிரச்சினை உள்ளிட்டவை இருக்கின்றன. நீரிழிவு நோயால் கால் விரல்களுக்கு இரத்த ஓட்டம் பாயாமல் இருந்ததால் வலதுகால் விரல்களில் சிலவற்றை மியாட் மருத்துவமனை கடந்த 2022 ஆம் ஆண்டு அகற்றியது. தைேராய்ட் பிரச்சினையால் அவரது பேச்சு பாதிக்கப்பட்டது. அதற்குச் சிகிச்சை கொடுத்து வந்தார்கள். அதன் பிறகு அவ்வப்போது பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்கு செல்வார், உடனே ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவார். சிறுநீரகப் பிரச்சினைக்கு சிகிச்சை பெறுகின்றார்.
அவருக்கு முதுகுத்தண்டு வடத்திலும் பிரச்சினை இருக்கிறது. தைேராய்ட்டும் சேர்ந்து இருப்பதால் கழுத்தில் இணைந்திருக்கும் தண்டுவடத்தின் நரம்பு பாதிக்கப்பட்டு அவருக்கு ஞாபக மறதி இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். தானாக சுவாசிக்க அவரால் முடியவில்லை. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது உள்ளார். இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த் பூரண நலம் பெற பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.