காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் முற்றுகை தொடரும் நிலையில் உலகெங்கும் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மத்திய லண்டனில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பிரமாண்ட பேரணியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றிருந்தனர். காசா மீதான தாக்குதலை நிறுத்தவும் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். பலஸ்தீன கொடியை ஏந்தியபடி இவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
வடக்கு அயர்லாந்தின் முக்கிய நகரமான லண்டன் பெர்ரியில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அயர்லாந்து குடியரசின் எல்லையில் டப்ளின் நகரம் நோக்கி ஆயிரக்கணக்கானோர், இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி பேரணியில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸில் பல்வேறு பகுதிகளில், ‘நாங்கள் அனைவரும் பாலஸ்தீனர்கள்’ என்ற முழக்கத்தோடு மக்கள் அணிவகுத்துச் சென்றுள்ளனர்.
ஜெர்மனியில் 7,000 பேர் கலந்து கொண்ட போராட்டம் தியுசல்டார்ஃப்பில் நடந்ததாகத் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
ரோம், பார்சிலோனா, டொரண்டோ, நியூயோர்க், மலேசியா என உலகின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள், யூதர்கள், கிறித்துவர்கள் என பல்வேறு இன மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.