Saturday, April 27, 2024
Home » எஞ்சிய போட்டிகளில் வெல்ல இலங்கை அணியினர் உறுதி

எஞ்சிய போட்டிகளில் வெல்ல இலங்கை அணியினர் உறுதி

by mahesh
October 18, 2023 10:20 am 0 comment

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்து உலகக் கிண்ண எதிர்பார்ப்பில் பின்னடைவை எதிர்கொண்டிருக்கும் இலங்கை அணி, சிறந்த முறையில் ஆடி எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்று ஆரம்ப துடுப்பட்ட வீரர் பத்தும் நிசங்க தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து எந்த ஒரு புள்ளியும் இன்றி புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகக் கிண்ண அரையிறுதி எதிர்பார்ப்பை தக்கவைத்துக் கொண்ட இலங்கை அணி எஞ்சியிருக்கும் ஆறு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுடனான போட்டிக்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பத்தும் நிசங்க, “எங்கள் மனநிலை நன்றாக உள்ளது. நல்ல முறையில் ஆடி எஞ்சிய போட்டிகளில் வெற்றிபெற நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

லக்னோவில் நேற்று முன்தினம் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 125 ஓட்டங்களை பெற்ற நிலையில் 209 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அவுஸ்திரேலிய அணி 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை பெற்ற வெற்றியீட்டியது.

“இது தான் கிரிக்கெட்டின் இயல்பு. கடந்த இரு போட்டிகளிலும் நாம் சிறப்பாக செயற்பட்டபோதும், அவ்வாறு இம்முறை செயற்பட முடியவில்லை. எமது தவறுகளை சரிசெய்து அடுத்த போட்டியை எதிர்கொள்வதிலேயே நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்” என்று நிசங்க தெரிவித்தார்.

இலங்கை வரும் சனிக்கிழமை (21) நெதர்லாந்து அணியை லக்னோவில் சந்திக்கவுள்ளது. உலகக் கிண்ணத்திற்கான எதிர்பார்ப்பை ஓரளவுக்கேனும் தக்கவைத்துக் கொண்ட இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவது அவசியமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT