அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின் மூலம் அமெரிக்க அரசு முடங்கும் அபாயம் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் மத்திய அரசு அமைப்புகள் மேலும் 45 நாட்களுக்குத் தொடர்ந்து செயல்பட வகை செய்துள்ளது. எனினும் உக்ரைனுக்கு உதவும்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வைத்த வேண்டுகோள் நிறைவேறவில்லை.
இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் மக்களவை நிராகரித்திருந்தால் ஆயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
இராணுவ நடவடிக்கைகள் முதல் உணவு உதவி, மத்திய கொள்கை உருவாக்கங்கள் வரையிலான அரசாங்கப் பணிகள் பலவும் பாதிக்கப்பட்டிக்கும்.
பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் சட்டமூலம் நிறைவேறி இருப்பதை அடுத்து தேவையில்லாத ஒரு நெருக்கடி தவிர்க்கப்பட்டுவிட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பைடன் இதைச் சட்டமாக்கும்போது அரசாங்கம் இன்னும் 45 நாட்கள் செயல்படுவதற்கு நிதி உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பாராளுமன்றத்தில் குடியரசு கட்சி உறுப்பினர்கள் எதிர்த்ததால் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.