திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் பெரும்போக அறுவடைக்கான 57ஆவது வருட புத்தரிசி விழா, கிண்ணியாவின் வான்எல கமநல சேவைகள் நிலையத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை ( 27) நடைபெற்றது.
இதன்போது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் நெல் அறுவடையை வரவேற்கும் வகையில் 40 மட்பாத்திரங்களில் புத்தரிசி இடப்பட்டு, அப்புத்தரிசியானது தேசிய மட்டத்திலான புத்தரிசி விழாவுக்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்ட பிரதான மட்பாத்திரத்தில் இடப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.
திருகோணமலை மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர் என்.விஸ்ணுதாசன் தலைமையில் இவ்விழா நடைபெற்றதுடன், இவ்விழாவில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபிலனுவான் அத்துகோரல்ல, திருகோணமலை மாவட்ட செயலாளர் சமிந்த ஹெட்டியாராச்சி, கமநல சேவை நிலைய ஊழியர்கள், சர்வமத தலைவர்கள், விவசாய சங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கிண்ணியா மத்திய நிருபர்