வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில் ஊடகவியலாளர் களைச் சந்தித்த அமைச்சர்,இதுகுறித்து அவர்களுக்கு விளக்கமளித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை கடத்தல்காரர்கள் மற்றும் மோசடியாளர்களின் பிடியில் இருந்து பாதுகாப்பது அவசியம்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளிடையேயான தொடர்பாடல்களை மேம்படுத்தவும், குறைகளைக் கையாளவும் இதனூடாக இலகுவாக்கப்பட்டுள்ளது.
இதைக் கருத்திற்கொண்டே இத்துறையை டிஜிட்டல்மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்கொள்ளும் தேவையற்ற தலையீடுகளை முறியடிப்பதற்கும், சட்டவிரோத நடவடிக்கைகளை திறம்பட எதிர்த்து செயற்படுத்துவதற்கும் அதிகாரம் அளிக்கும் வகையில்,இத்துறை டிஜிட்டல் மயமாக்கப்படும்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தொலைபேசியில் ஒரு ‘செயலி ‘ இருக்கும். அதணூடக அவர்களது சுகயீனம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகளையும் இதனூடாக கண்டறிய வசதிகள் ஏற்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.தற்போதைய சட்டத்தின்படி, உப முகவர்கள் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்தப் பொறுப்பையும் கொண்டிருக்கவில்லை.
உப முகவர்களை கையாள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டம் திருத்தப்பட்டுள்ளது.இது, தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.