நபி (ஸல்) அவர்கள் புனித ரமழானில் நின்று வணங்குவதோடு ஏனையோரையும் அதற்கு ஆர்வமூட்டக்கூடியவர்களாக இருந்தார்கள். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அல்லாஹுத்தஆலா அவனது அருள்மறையில் இரவு வணக்கம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றான்.
‘அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள். மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்’. (32:16).
‘அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது’. (32:17).
மேலும் நபி (ஸல்) அவர்கள் ரமழானில் இரவு வணக்கத்தில் ஈடுபடுவது தொடர்பில் குறிப்பிடும் போது, ‘யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும், இரவு வணக்கத்தில் ஈடுபடுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்றார்கள். (ஆதாரம்- ஸஹீஹுல் புஹாரி)
மற்றுமோர் ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘யார் லைலத்துல் கத்ர் எனும் மகத்துவ மிக்க இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடுகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்’ என்றும் கூறியுள்ளார்கள். (ஆதாரம்- ஸஹீஹுல் புஹாரி).
எனவே, ரமழானின் இரவு நேரங்களில் வீண்விளையாட்டுக்களில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்த்து இரவு வணக்கங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் இறையருளைப் பெறுவோம்.
முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ்
(காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்