Monday, April 29, 2024
Home » இசைமொழி ஊடாக இன ஒற்றுமையை வெளிப்படுத்திய தமிழ், சிங்கள மாணவர்கள்

இசைமொழி ஊடாக இன ஒற்றுமையை வெளிப்படுத்திய தமிழ், சிங்கள மாணவர்கள்

by damith
February 26, 2024 9:45 am 0 comment

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்கிலங்கையின் பெரும் கலைக்கூடம். 2002 இல் ஆரம்பிக்கப்பட்ட இது கடந்த 20 வருட காலங்களை கடந்து வந்துள்ளது. அதனை அருகிலிருந்து அவதானிக்கும் வாய்ப்பும், அதனோடு பயணிக்கும் வாய்ப்பும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அதனால் அதனை உள்ளும் புறமும் அறியும் வாய்ப்பும் வாய்த்திருக்கிறது.

அதன் வளர்ச்சியில் பங்கு கொண்டோர் பலர். அண்மைக் காலமாக அதன் செயல்பாடுகள் பல்துறைப்பட்டனவாக வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அங்கு கல்விபயிலும்

நடன, நாடக, ஓவியத்துறை மாணவர்கள் வெளிநாடுகளுக்கும் சென்று தங்கள் திறமைகளைக் காட்டி வருகிறார்கள். இந்தப் பின்னணியிலேயேதான் அண்மையிலே அந்த நிறுவகம் கொழும்பு கட்புல, ஆற்றுகைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து நடத்திய இசைநிகழ்வை பார்க்க வேண்டி உள்ளது

இது நடந்தது 14.02.2024 அன்று ஆகும். ஏறத்தாழ முப்பதுக்கு மேற்பட்ட சிங்கள மாணவர்களும் 60 இற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களும் இணைந்த நிகழ்வு ஒன்றை மேடையில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. மேடையில் பெரும் தொகை மாணவரக்ள் இணைந்து கொண்ட பெருநிகழ்வு அது. இதற்கு சிறப்பு விருந்தினராக நான் அழைக்கப்பட்டு இருந்தேன். இரண்டு பல்கலைக்கழக வேந்தர்களும் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இதன் ஒழுங்கமைப்பாளராகச் செயல்பட்டவர் திருமதி காமினி. கொழும்பு கட்புல ஆற்றுகைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான இவர் இனக்குழும இசையில் கலாநிதி பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டிருப்பவர். அவருக்கு உதவியாக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி பிரியா ஜதீஸ்வரன், இசைத் துறைத் தலைவி கலாநிதி நிர்மலேஸ்வரி ஆகியோர் இருந்திருக்கிறாரக்ள்.

ஒளி வசதிகளை நாடக விரிவுரையாளர் தர்மலிங்கம் செய்திருந்தார். கொழும்பு கட்புல ஆற்றுகைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு இளைஞர். அவரது பெயர் றோகன் நெத்சிங்கா. அவர் ஒரு இசைப்பேராசிரியர். அவர் ரஷ்யாவில் இசைத்துறையில் ஆராய்ச்சி செய்தவர். இனக்குழும இசை (Ethnomusicology) அவரது ஆய்வுத்துறையாகும். அவரோடு உரையாடும் போது அவரது ஆர்வமும் அறிவும் செயல்திறனும் தெரிந்தன.

கொழும்பு கட்புல ஆற்றுகைப் பல்கலைக்கழக இசைத்துறையும் விபுலானந்த அழகியல் கற்கைகைகள் நிறுவ இசைத் துறையும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. இசை நிகழ்வு பெரும்பாலும் இரு இனத்தாரிடமும் பயில் நிலையிலுள்ள கிராமிய இசைகளையே மையம் கொண்டிருந்தது. தாலாட்டு பாடல், ஒப்பாரிப் பாடல், சடங்குப் பாடல்,வேடிக்கைப் பாடல், நாடகப் பாடல் என அவை அமைந்திருந்தன. சிங்கள, தமிழ் இசை மரபுகளின் ஒற்றுமையை அங்கே காண முடிந்தது.

சிங்கள மாணவர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடியதும், தமிழ் மாணவர்கள் சிங்களப்பாடல்களைப் பாடியதும் பின்னர் இரு சாராரும் இணைந்து சில பாடல்களைப் பாடியதுமான அந்த ஒற்றுமை மனதைக் கவர்ந்தது. இந்த அழகிய தீவில் வாழுகின்ற சிங்கள மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையே பெரும் சுவராக நிற்பது மொழியாகும். ஒருவர் மொழியை ஒருவர் அறியாத நிலை. நமது கல்வித் திட்டம் காரணமாக சிறு வயதில் இருந்தே இரு இன மாணவர்களும். மற்றவர்கள் மொழியை பூரணமாக அறிகின்ற வாய்ப்பு வாய்க்கவேயில்லை.

மொழி என்பது வெறும் உரையாடல் சாதனம் மாத்திரம் அல்ல, அது உணர்வு சார்ந்தது, ஒரு சமூகத்தின் வாழ்க்கை சார்ந்தது, அச்ச சமூகத்தின் பண்பாடு சார்ந்தது. மொழியை அறிவதன் மூலம் இன்னொரு சமூகத்தின் உணர்வையும் பண்பாட்டையும் வாழ்க்கையையும் நாம் அறியலாம். இந்தச் சந்தர்ப்பத்தை நம் சிறார்களுக்கு நமது கல்வித் திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கவே இல்லை.

இந்நிலையிலே இவ்விரு சாராரையும் இணைக்கின்ற ஒரு புதுமொழியாக இசைமொழி அமைந்திருந்தமை முக்கியமான அம்சமாகும்.

தமிழ் மாணவர்கள் தம் கோல உடைகளில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. சினிமா கவர்ச்சியே அங்கு அதிகம் காணப்பட்டது. சிங்கள மாணவர்கள் மேடை அமைப்புக்கான உடையை வடிவமைத்து இருந்தனர். அந்த உடையமைப்பு எளிமையாகவும் அழகாகவும் இருந்து ஒரு அழகியல் உணர்வைத் தந்தது. மேடைக்கு உடையமைக்கையில் ஒளியையும் கணக்கில் எடுக்க வேண்டும் அல்லவா, அதற்கு ஒரு அழகியல் இருக்க வேண்டும் அல்லவா?

தமிழ் மாணவர்கள் பின்னணி இசையாக உடுக்கை மாத்திரமே பாவித்தனர். சிங்கள மாணவர்கள்

கெட்ட பெர, மகுள் பெர என அழைக்கப்படும் சிங்கள மத்தளங்களையும் உடுக்குடன் நவீன இசைக்கருவிகளையும் பாவித்தனர். இதனால் அவர்கள் ஆற்றுகையில் செழுமையும் அழகும் தெரிந்தன.

மாணவர்கள் பலரை அழைத்துப் பாராட்டினேன். பாராட்டு கலைஞர்களுக்கு மிக இன்றி அமையாதது. விபுலானந்த மாணவிகளுட் பலர் கூச்ச சுபாவத்துடன் காணப்பட்டனர். அறையில் அமைதியாக இருந்து பாடப் பழக்கப்பட்டவ்ர்கள் அவர்கள். அவர்களுக்கு கூச்சம் கலைய, உரத்துப்பாட ஒரு பயிற்சிப்பட்டறை அவசியம் என துறைத்தலைவியிடம் கூறினேன்.

விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக இசைத்துறை இத்தகைய மேடை நிகழ்வுகளைச் செய்யும் போது அங்குள்ள நாடகத்துறை, ஓவியத்துறை ஆகியவற்றின் உதவிகளைப் பெற்றிருந்தால் மேலும் இந்நிகழ்வுசிறப்பாக இருந்திருக்கும் என என் அபிப்பிராயத்தை அவர்களிடம் கூறினேன். நிறுவகத்துள் வளம் கொட்டிக் கிடக்கிறது, ஒற்றுமையும் புரிந்துணர்வும் இணைந்து செயல்படும் எண்ணமுமே மிகமிக முக்கியம்.

நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் கென்னடியும், கொழும்பு கட்புல ஆற்றுகை பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் மோகன் நெத்தசிங்காவும், கிழக்குப் பலகலைக்க்ழக உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம் அவர்களும் சிறப்பாக உரையாற்றினார்கள்.

இனஉறவுக்காக இதுகாலவரை செயல்பட்ட எம் போன்ற வயது போன பழம் தலைமுறை

வாழ்வின் சாயங்காலப் பொழுதில் இனஒற்றுமையில் பெரும் நம்பிக்கையற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்வுகள் பெரு நம்பிக்கையை தருகின்றன.

(பேராசிரியர் மௌனகுரு அவர்களின் பதிவிலிருந்து)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT