கப்ரா சூசா மாவட்டத்தில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மீது பல ஏவுகணைகள் வீசப்பட்ட தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சிரிய இராணுவம் கூறியுள்ளது.
எனினும் இந்தத் தாக்குதல்களில் இரு வெளிநாட்டினர் மற்றும் ஒரு சிரிய நாட்டவர் கொல்லப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதி ஈரான் புரட்சிக் காவல் படை மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் நடமாடும் இடமாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
சிரியாவில் 2011 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் வெடித்தது தொடக்கம் அந்த நாட்டின் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான முறை வான் தாக்கதல்களை நடத்திய நிலையில் காசாவில் போர் வெடித்ததை அடுத்து அந்தத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் ஒன்பது மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு அதன் நான்காவது மாடியைச் சூழ சேதம் ஏற்பட்டிருப்பதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மறுபுறம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது மகள் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் காயமடைந்த அந்த இளம் பெண்ணும் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் இஸ்ரேலிய படைக்கு இடையே மோதல் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.