வசந்தம், கோடை, இலையுதிர், குளிர்காலமென பருவம் மாறுவதனை வாழ்நாள் முழுவதும் நாம் காண்கிறோம். அவ்வாறே திருவருகை,கிறிஸ்து பிறப்பு, தவக்காலம்,பாஸ்கா என்று புனித காலங்கள் திரும்புவதனையும் காண்கிறோம்.
விபூதிப் புதனன்று நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளமிட்டு நாம் தவக்காலத்தினைஆரம்பித்தோம். மீளவும் புனிதர்களாக இருக்க வேண்டிய அழைப்பினைஅந்நாளில் கேட்டோம்.
நம்மில் ஏற்படுகின்ற மனமாற்றமானது நாம் தீமைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவும், தாழ்ச்சியுடனும் நேர்மையுடனும் பயணிக்கவும் துணைசெய்யும்.
அத்துடன் வழிபாட்டுக் கொண்டாட்டங்களில் செயற்துடிப்புடன் பங்கேற்கவும், கடவுளுடனும், நமது சகோதர சகோதரிகளுடனான உறவினை ஆழப்படுத்தவும் உதவிடும்.
இறைவேண்டல், உண்ணா நோன்பு, தர்மச் செயல்கள் இக்காலத்தின் தூண்களாகும். இன்றைய வழிபாடானது விவிலியத்தின் மிகவும் ஈர்க்கத்தக்க ஒருபகுதியினை நமக்குத் தருகிறது. அது யாதெனில், ஒரு கிறிஸ்தவரின் வாழ்வின் மிகமுக்கியமான விடயமாகிய அன்பு வாழ்வு வாழ்வதனை அது நமக்கு நினைவூட்டுகிறது. நாம் ஏற்கனவே அன்பு செய்வோரோடு மட்டுமல்லாது தேவையில் உள்ளவரோடும், யாரும் கவனியாதாரோடும் அதனைச் செயற்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.
அன்புக்காக ஏங்குபவர்கள் தேவையில் உள்ளவர்கள் என்பதனால், அவர்கள் நமது அன்பினைப் பெறுவார்கள். அவர்களிடம் உண்பதற்கு எதுவுமில்லை, உடுத்துவதற்கும் எதுவுமில்லை. ஏழைகள்,நோயாளிகள்,வயோதிபர்கள்,ஒதுக்கப்பட்டவர்கள்,அந்நியர்கள் ஆகிய இவர்களை இக்காலத்தில் சந்திப்பதன் வாயிலாக அவர்களுக்கான எமது பணியினைஆரம்பிக்கலாம்.
தேவையில் இருப்போர் மீதான உறுதியான நிலைப்பாடு இயேசுவின் வார்த்தையாகிய“என் தந்தையிடமிருந்து ஆசிபெற்றவர்களே ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்பதனை நமக்குள் தெளிவாக எதிரொலிக்கச் செய்யும்.
-அருட்தந்தை நவாஜி (திருகோணமலை மறைமாவட்டம்)