அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் 2024.02.12 ஆம் திகதியன்று சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட டொக்டர் எஸ். கியாஸ்தீன் – வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி யூ.எல்.எம். வபா தலைமையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில், டொக்டர் கியாஸ்தீன் நினைவுச் சின்னம் மற்றும் பாராட்டு மடல் வழங்கி – கௌரவிக்கப்பட்டார்.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் கியாஸ்தீன் 1986ஆம் ஆண்டு வைத்தியராக நியமனம் பெற்று சாய்ந்தமருது வைத்தியசாலையில் முதன்முதலாக கடமையைப் பொறுப்பேற்றார். இவர் தனது பணிக்காலம் முழுவதும் – சொந்த மாவட்டமான அம்பாறை மாவட்டத்திலேயே கடமையாற்றியிருந்தார்.
1990 ஆம் ஆண்டு தொடக்கம் 1992ஆம் ஆண்டு வரை, நாட்டில் பயங்கரவாதப் பிரச்சினை உச்சகட்டத்தில இருந்தபோது அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய மூன்று பிரதேச வைத்தியசாலைகளிலும் தனியொரு வைத்தியராக அர்ப்பணிப்புடன் இவர் பணியாற்றியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது. குறித்த மூன்று வைத்தியசாலைகளுக்கும் இவர் ஒருவர் மட்டுமே – அந்தக் காலப்பகுதியில் வைத்தியராக இருந்தார்.
இவரின் தந்தை எம்.ஏ. சம்சுதீன் – அட்டாளைச்சேனையின் முதலாவது விஞ்ஞான பட்டதாரி (BSC) ஆவார். பொத்துவில் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. ஜலால்தீன் இவரின் சிறிய தந்தை (தந்தையின் இளைய சகோதரர்) என்பது குறிப்பிடத்தக்கது.
டொக்டர் கியாஸ்தீனுடைய மற்றொரு சிறிய தந்தையான சாபிடீன் என்பவர் அட்டாளைச்சேனையின் முதலாவது கலைமாணி பட்டதாரி ஆவார். இவரின் சகோதரர்களில் ஒருவரான சட்ட முதுமாணி எஸ். நியாஸ் என்பவர், இலங்கை சுங்கத் திணைக்களத்தில் மேலதிக பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இலங்கை முஸ்லிம்களில் மேற்படி பதவியை வகித்த முதல் நபர் – நியாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான குடும்பப் பின்னணியைக் கொண்ட டொக்டர் கியாஸ்தீன், தனது 63ஆவது வயதில் தனது அரச பணியிலிருந்து 2024.02.12 ஆம் திகதி ஓய்வுபெற்றுள்ளார்.
றிசாத் ஏ. காதர் (ஒலுவில் மத்திய விசேட நிருபர்)