பாகிஸ்தான் பொதுத் தேர்தலன்று நடைபெற்ற 51 பயங்கரவாதத் தாக்குதல்களில் பத்து பாதுகாப்புப் படையினர் உட்பட குறைந்தபட்சம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 39 பேர் காயமடைந்துள்ளனர் என்று தி நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
“51 கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் பலுகிஸ்தானில், தேர்தல் செயல்முறையை சீர்குலைக்கும் நோக்கில், அதிக சம்பவங்கள் பதிவாகின. மற்றும் பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. “என பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
“செயல்திறன் வாய்ந்த உளவுத்துறையின் விரைவான நடவடிக்கை மூலம், பல சாத்தியமான அச்சுறுத்தல்கள் தடுக்கப்பட்டன. நமது குடிமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் நமது பாதுகாப்பு முகவர் நிலையங்கள் உறுதிப்பாட்டுடன் செயற்பட்டன. பல்வேறு நடவடிக்கைகளின் போது, ஐந்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்” என்றும் அந்த செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தத் தாக்குதல்களில் பாதுகாப்புப் படைகள் மற்றும் சட்ட அமுலாக்க நிறுவனங்களைச் சேர்ந்த 10 பணியாளர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாகவும் 39 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அறிக்கையின்படி, 137,000 இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஆயுதப் படை வீரர்கள் 6,000 அச்சுறுத்தலான வாக்குச் சாவடிகளில் நிறுத்தப்பட்டதாகவும், வன்முறையைத் தடுக்க 7,800 விரைவுப் படைக் குழுக்கள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஏனைய சட்ட அமுலாக்க முகவர் நிறுவனங்களுடன் இணைந்து ஆயுதப்படைகள் தேர்தல் செயல்முறையின் போது பாதுகாப்பை வழங்குவதில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஜனநாயக செயல்முறையைப் பாதுகாப்பதற்காக ஆயுதப் படைகளுடன் கைகோர்த்து உழைத்த ஏனைய சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நமது தியாகங்கள் வீண்போகாது, ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த இந்தத் தேர்தல் ஒரு உந்துசக்தியாக அமையும் பாகிஸ்தான் மக்களின் அபிலாஷைகளை நனவாக்க வழி வகுக்கும்” என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மோசடி மற்றும் கைபேசி மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் முடிவடைந்திருந்தது.
எவ்வாறாயினும், வாக்குப்பதிவு சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்படவில்லை எனவும் மோசடி மற்றும் மக்கள் வாக்களிக்கத் தடை விதிக்கப்பட்டதாகவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
பொதுத் தேர்தலின் போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக பாகிஸ்தான் முழுவதும் கைபேசி மற்றும் இணைய சேவைகளை மத்திய உள்துறை அமைச்சு நிறுத்தியிருந்தது.
இந்த விவகாரம் முக்கிய அரசியல் கட்சிகளிடம் இருந்து கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி நாடு முழுவதும் கைபேசி சேவைகளை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஸ்வாபி மாவட்டத்தின் அதீனா கிராமத்தில் பெண்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்ததாகக் கூறப்படுகிறது. வாக்குச்சாவடியில் தேர்தல் பணியாளர்கள் இருந்ததாகவும், சில பெண் வாக்காளர்கள் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மற்றொரு சம்பவத்தில், வாஷ்புட் பஞ்ச்கூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.