மட்டக்களப்பில் விவசாயிகளிடம் சட்டவிரோத கள்ள தராசின் மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளை அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தேடி முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத தராசின் மூலம் மோசடியாக நெல் கொள்வனவு செய்துவந்த 8 வியாபாரிகளின் தராசில்களை கைப்பற்றியதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அளவீட்டு திணைக்கள அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் தற்போது வேளாண்மை அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்துவரும் வெளி மாவட்ட வியாபாரிகள் தராசில் மோசடி செய்து விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்துவருவதாக விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் வயல்பகுதிகளில் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் தராசை பரிசோதனை செய்யமாறு அரசாங்க அதிபர் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து சம்பவதினம் செங்கலடி பிரதேசத்திலுள்ள வயல் பகுதிகளில் லொறிகளில் நெல் கொள்வனவு செய்துவரும் வியாபாரிகளை தேடி முற்றுகையிட்டு அவர்களின் தராசில்களை பரிசோதனை செய்தனர்.
இதில் அரச அனுமதியற்ற 5 தராசுகளும் அளவையில் மோசடி செய்யப்பட்ட 3 தராசில்கள் உள்ளிட்ட 8 தராசில்களை கைப்பற்றியதுடன் 8 வியாபரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
மட்டக்களப்பு குறூப் நிருபர்