அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் அவுஸ்திரேலியா தமிழ் பொறியியலாளர் அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் 2024 ஆம் ஆண்டில் கணித விஞ்ஞான பிரிவில் தோற்றும் மாணவர்களுக்குரிய மேலதிக பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன.
தேசிய பாடசாலை மண்டபத்தில் ஆரம்பமான பயிற்சி வகுப்புக்களின் வளவாளர்களாக ஆசிரியர்களான லிசிகரன், நாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்களான ஜெயகாந்தன், லதர்சன் ஆகியோரும் இணைந்து கொள்கின்றனர்.
பயிற்சி வகுப்புக்களுக்கான ஒழுங்கினை பாடசாலை அதிபர் ஜயந்தனின் அறிவுறுத்தலுக்கமைய பொறுப்பாசிரியர் இன்பராஜா மேற்கொண்டிருந்தார்.
பயற்சி வகுப்புக்களின் நடைமுறை தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் பழைய மாணவர் சங்க செயலாளருமான வி.பபாகரன், சங்கத்தின் உபதலைவரும் பொறியியலாளருமான லோகிஸ், சங்கத்தின் உறுப்பினரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான வி.சுகிர்தகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அவதானம் செலுத்தினர்.
கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களின் அடைவு மட்டம் கடந்த காலத்தில் ஆலையடிவேம்பு கல்விக்கோட்டம் மாத்திரமன்றி திருக்கோவில் கல்வி வலயத்தில் குறைவாக காணப்பட்டது.
இதற்கான பிரதான காரணமாக மாணவர்களுக்கு போதியளவு பயிற்சி வகுப்புக்களை இடம்பெறாமை மாணவர்களிடையே போதிய நிதி வசதி இன்மை போன்ற காரணிகள் தாக்கம் செலுத்தியமை அவதானிக்கப்பட்டது.
இதனை கருத்திற் கொண்டே அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கமானது அவுஸ்திரேலியா தமிழ் பொறியியலாளர் அமைப்பு மற்றும் தனவந்தர்கள் போன்றோரின் நிதிப்பங்களிப்புடன் பயிற்சி வகுப்பினை நடத்தி அதனூடாக அடைவு மட்டத்தினை உயர்த்தி சிறந்த பெறுபேறுகளை உயர்தரப்பரீட்சையில் பெற்று வலயத்தில் அதிகளவான வைத்தியர்களையும் பொறியியலாளர்களையும் உருவாக்கும் இப்பணியை முன்னெடுத்துள்ளது.
இத்திட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் நிகழ்வில் வலயத்தில் உள்ள கணித விஞ்ஞான பிரிவில் தோற்றும் மாணவர்கள் மற்றும் இரண்டாம் மூன்றாம் தடவை தோற்றும் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற முடியும் எனவும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
வி.சுகிர்தகுமார்
வாச்சிக்குடா விஷேட நிருபர்