உலக ஈரநிலங்கள் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி ஈரான் நாட்டிலுள்ள ராம்சார் நகரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமவாயத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் உலக ஈரநிலங்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இன்று மனிதனின் உதாசீனமாக செயற்பாட்டினால் பூகோளத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலகம் முழுக்க மனிதனின் தொடர் செயலினால் ஈரநிலங்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கியுள்ளன.
சுற்றுலாத் தளங்களை உருவாக்குதல், புதிய கட்டுமானப் பணிகள், கடலை மூடி நகரமயமாதல், வயல் நிலங்களில் புதிய குடியிருப்புகளை அமைத்தல் என்பன இத்தகைய இயற்கை நிலங்களை அழிக்கும் செயற்பாடுகளாகும்.
வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கும் இடம்சார் காலநிலை, நுண்காலநிலை என மழை மற்றும் வெயில் அதற்குரிய காலநிலைகளில் ஒழுங்காக சுழற்சி முறையில் இடம்பெறுவதனை உறுதி செய்யும் வேலையினையே ஈரநிலங்கள் செய்து கொண்டு வந்தன.
ஈரநில சூழற்தொகுதியானது உயிர்ப்பல்வகைமையைப் பொறுத்த வகையில் முக்கியமானதாக கொள்ளப்படுகின்றது. சுற்றாடல் சமநிலையை பேணுவதற்கு உகந்ததாக கொள்ளப்படும் ஈரநிலங்கள் ஆறுகள், தாழ் நிலங்கள், ஈரமான புல்வெளிகள், கழிமுகங்கள், கடலோர குடியிருப்பு பகுதிகள், சதுப்பு நிலங்கள், பவளத்திட்டுக்கள், நெற்பயிர் நிலங்கள் என்பனவற்றையும் உள்ளடக்குகின்றன.
இன்றைய எதிர்கால சந்ததியினருக்கு ஈரநிலத்தின் முக்கியத்துவம் கருதி பாதுகாப்பதற்கான வழிவகைகள் ஊட்டப்பட வேண்டும். ஈரநில சூழலியல் குறித்தான கொள்கைகள் வகுக்கப்பட்டு ஈரநிலங்களை நீடித்த நிலைத்த பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பராமரிக்கவும், அந் நிலங்களை முறையாக பயன்படுத்தும் போது அதன் பயன்களை உள்வாங்கும் வகையில் நிலத்தடி நீர் சேமிப்பு , குடிநீர்ப்பயன்பாடு , வெள்ளம் மற்றும் வரட்சி காலங்களில் பாதுகாப்பதற்காகவும், காலநிலை மாறுதல், பூகோளத்தில் காபன் தாக்கம் என்பவற்றில் ஈரநிலங்கள் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
–
எம்.ஐ.எம்.அஸ்ஹர் (மாளிகைக்காடு குறூப் நிருபர்)