புத்தளம் தில்லையடியில் கடந்த இரண்டு வருடங்களாக எவ்வித அபிவிருத்தியும் இன்றி தடைப்பட்டிருந்த அல் ஜிந்தா பாலத்தின் புனரமைப்பு வேலைகள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமின் முயற்சியினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பாலம் தொடர்பில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கடந்த 2021 ஆம் ஆண்டு புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக மேற்படி பாலத்தின் புனரமைப்பு வேலைத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் புத்தளம் தில்லையடி அல் ஜிந்தா பகுதி வாழ் பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்த தொடர் கோரிக்கையை அடுத்து அல் ஜிந்தா பாலத்தின் புனரமைப்பு வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான நிதியினை விடுவிக்குமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி பெருந்தெருக்கள் அமைச்சு மற்றும் கிராமிய வீதி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுடன் தொடர்புகளை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையினை அடுத்து அல் ஜிந்தா பாலத்தின் புனரமைப்பு வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கபட்டுள்ளது.
மேற்படி பாலத்தின் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமுக்கு புத்தளம் தில்லையடி அல் ஜிந்தா பகுதி மக்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (கற்பிட்டி சியாஜ்)