கடந்த ஜனவரி 22ஆம் திகதி தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் பெலியத்த பகுதியில் ‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் (29) ஹூங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் 2 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, மேலும் ஒருவர் நேற்றையதினம் மாத்தறை குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் மாத்தறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர்கள் 28, 42, 58 வயதுடைய நீர்கொழும்பு, அலவ்வ, பூசா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட T-56 ரக துப்பாக்கிகளை எடுத்துச் சென்றமையுடன் தொடர்புடைய மற்றும் குற்றச் செயல்களின் போது பணக் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக பெலியத்த பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில் பெலியத்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை இரண்டு பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.