மேல் மாகாணத்தில் மட்டும் 1,956 பேர்
நாடளாவிய ரீதியில் இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் 5,892 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தது.
டெங்கு நோயாளர்களில் 1,956 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், இந்த நோயாளர்களில் 1,228 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், அப்பிரிவு தெரிவித்தது. இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தின் பொரளை உள்ளிட்ட இடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தது. இதற்கிடையில், டெங்கு நோய்க்கு உள்ளாகி 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர் இந்த வாரத்தில் உயிரிழந்தார். கடந்த 2023ஆம் ஆண்டில் 86,232 டெங்கு நோயாளர்கள் பதிவாகியமையை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியது.