அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு
அனுபவமில்லாத ஒருவரை ஜனாதிபதியாக நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்துக்குள் தள்ள முடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு, நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவது சிறந்தது என்பதே தமது தனிப்பட்ட நம்பிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபரான தம்மிக்க பெரேரா ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப் போவதாக அவரே தெரிவித்து வருவதாகவும், அது தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பொதுஜன பெரமுன கட்சியானது பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேராவுடன் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்தவித இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான பேச்சுவார்த்தை அவருடன் நடத்தப்பட்டதாகவும் நான் அறியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்