நுவரெலியா மாவட்டத்தின் இராகலை நகரில் உள்ள டெல்மார் பிரதேசத்தில் கல்வியில் நிலவுகின்ற பின்னடைவை நிவர்த்தி செய்யும்முகமாக இப்பிரதேசத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகம் மற்றும் கல்வியில் கல்லூரிகளுக்குத் தெரிவான மாணவ மாணவிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பே வள்ளுவர் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆகும்.
வள்ளுவர் கல்வி அபிவிருத்தி மன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் செயற்பாடுகளில் ஒன்றாக டெல்மார் பிரதேசத்திற்கான திறன் வகுப்பறை உருவாக்கம் காணப்படுகின்றது.
திறன் வகுப்பறையானது இப்பகுதி மாணவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதொன்றாகக் காணப்படுகிறது. இது மாணவர்களின் இணையவழி கற்றல் நடவடிக்கைகளுக்கும் மாணவர்களின் தேடல்களுக்கும் மிகப் பயனுடையதாகக் காணப்படும் என்ற நோக்கத்தோடு வள்ளுவர் திறன் வகுப்பறையும் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வலப்பனை கல்வி வலய கோட்டக் கல்வி பணிப்பாளர் யோகராஜா விசேட அதிதியாகக் கலந்து கொண்டார்.
அவர் அங்கு உரையாற்றுகையில், “இந்த திறன் வகுப்பறையானது எமது பிரதேசத்திற்கு கிடைத்த பெரும் உதவியாகும். இந்த வகுப்பறையைப் பயன்படுத்தி எமது மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும். அத்துடன் இதற்கு உதவி செய்த Ratnam Foundation அமைப்பினர், Vision Global Empowerment நிறுவனத்தினர் மற்றும் W. Harichandran ( USA ) ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.
இப்பாடசாலை அதிபர் நந்தகுமார், தோட்ட பொதுமக்கள், மன்றத்தின் ஏனைய உறுப்பினர்கள், ஏனைய தன்னார்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.