கிழக்கில் கடந்த வாரம் முழுவதும் பெய்த கடும் மழை காரணமாக தாழ்நிலப்பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளதுடன் மேலும் சில இடங்களில் வெள்ள அனர்த்தமும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் கடும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் ஆகியன அறிவித்துள்ளன.
இந்நிலையில் வெள்ள அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டும், அனர்த்தத்தில் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கும் பொருட்டும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனர்த்த முகாமைத்துவக் குழுவின் விசேட ஒன்றுக் கூடல் அண்மையில் நடைபெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
கல்முனை பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களூடாக அனர்த்தம் தொடர்பாக மக்களை விழிப்பூட்டுதல், வைத்தியசாலைகள் உள்ளிட்ட பிராந்திய சுகாதார நிறுவனங்களிலுள்ள அனர்த்த முகாமைத்துவ குழுக்களை ஒழுங்குபடுத்தி தயார் நிலையில் வைத்துக் கொள்ளல், அனர்த்த நிலைமைகளின் போது அதற்கு முகம் கொடுப்பது தொடர்பாகவும் மக்களின் பாதுகாப்பு நலன்கருதியும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படல்,
வெள்ள நீரினால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முறையான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல்,
அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும் பொருட்டு மருத்துவ முகாம்களை நடாத்துதல்,
அனர்த்த பாதுகாப்பு தொடர்பான விடயங்களை முன்னெடுத்தல் என பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)