பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியில் கரம்பை பகுதியில் இன்று (5) காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுரங்குளி, கரிக்கட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதான விஜேசிங்க ஆராச்சிகே சஞ்சீவ அனுர மங்கள குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி பகுதியில் இருந்து பாலாவியை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும், எதிர்த் திசையில் பயணித்த லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியில் பயணித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் மீதான மரண விசாரணையை புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணையை நடத்தினார்.
அத்துடன், உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.
விபத்துடன் தொடர்புடைய சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.