புத்தாண்டு தினத்தில் மத்திய ஜப்பானின் கடற்கரையை தாக்கிய சக்திவாய்ந்த பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.
பரந்த அளவில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சில தொலைதூரப் பகுதிகளை அடைவதில் மீட்பாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
இஷிகாவா மாகாணத்தில் நோட்டோ தீபகற்பத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (01) நண்பகலில் இடம்பெற்ற 7.6 ரிச்டர் அளவிலான பூகம்பத்தை அடுத்து தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் சில பகுதிகளில் 1 மீற்றர் அளவு சுனாமி அலை தாக்கியது.
பரந்த அளவில் சேதங்கள் பதிவாகி இருப்பதாக நேற்று குறிப்பிட்ட பிரதமர் கிஷிடா, பூகம்பத்தால் கட்டடங்கள் இடிந்து தீச்சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக குறிப்பிட்டார்.
பூகம்பத்திற்கு மையப் பகுதிக்கு அருகில் இருக்கும் துறைமுக நகரான சுசூவில் 1,000 அளவான வீடுகள் சேதமடைந்திருப்பதாக அந்த நகர மேயர் முசுஹிரோ இசுமியா தெரிவித்துள்ளார்.
இஷிகாவா மாகாணத்தில் 30 பேர் வரை கொல்லப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதில் பாதிக்கும் அதிகமானவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தீபகற்பத்தின் வட முனையில் இருக்கும் விஜிமா பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
பிரதான பூகம்பம் ஏற்பட்டது தொடக்கம் சுமார் 155 முறை பின் அதிர்வுகள் பதிவாகி இருப்பதாக ஜப்பானின் வானிலை ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.