புதிய கொவிட் 19 திரிபு குறித்து அடிமட்டத்தில் எந்தவொரு ஆராய்வும் செய்யப்படாதுள்ள நிலையில், அண்மைக்காலமாக சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால்,மக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும் எனவும் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உலகளவில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான வர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புக்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. புதிய கொவிட் 19 திரிபு நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதை விசேட நிபுணர்களும் , சுகாதாரத் துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளதால், அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆபத்தான நிலைமையில்லை எனக் கூற முடியாதுள்ளது.
இவ்விவகாரம் குறித்து அரசு தரப்பில் முறையான விசாரணை நடத்த வேண்டும். பின்னர் சுகாதாரத்துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வாறாயினும், பொதுமக்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் மக்கள் கேட்கப்படுகின்றனர்.