பேருவளை சீனன்கோட்டை பௌண்டேஷன் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட தையல் கலை பயிற்சி நெறியை பூர்த்தி செய்த நூறு மாணவிகளால் ஒழங்கு செய்யப்பட்ட கைப்பணிக் கண்காட்சி அதன் காரியாலயத்தில் நேற்று முன்தினம் (30) நடைபெற்றது. தொழில் கல்வியை மேம்படுத்தும் நோக்கோடு நடாத்தப்பட்ட இப்பயிற்சி நெறியில் கலந்துகொண்ட மாணவிகளது திறமைகளை வெளிக்காட்டும் வகையில் கண்காட்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சீனன்கோட்டை பௌண்டேஷனின் தலைவர் அல்ஹாஜ் பஸால் அதன் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அரபாத் கரீம் (நளீமி), சீனன்கோட்டை பௌண்டேஷன் நிறுவனம் தொழில் கல்வியை வழங்கும் நோக்கோடு கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக தையல் கலை பயிற்சிநெறியை நடாத்திவருகின்றது எனவும் இதன் விளைவாக பல குடும்பங்களது பொருளாதார நிலை முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.