ஜப்பான் நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தரவுள்ளார்.
ஜனவரி 09ஆம் திகதி 04 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இலங்கை மற்றும் கம்போடியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக, ஜப்பான் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இரண்டு ஆசிய நாடுகளுடன் ஜப்பானின் உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைவதாக தெரிவித்த ஜப்பான் நிதி அமைச்சர், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த நவம்பரில் இலங்கை, ஜப்பான் மற்றும் பிறர் தலைமையிலான கடனாளர்கள் குழுவினர், கடன் திருப்பி செலுத்துவதை ஒத்திவைப்பது மற்றும் வட்டி விகிதங்களை குறைப்பது தொடர்பான அடிப்படை உடன்பாட்டை எட்டியிருந்தனர்.
கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு நிலையான முன்னேற்றம் மிகவும் முக்கியமானதெனவும், ஜப்பான் நிதி அமைச்சர் சுசுகி ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கம்போடியாவில் நெருக்கமான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் ஜப்பான் நிதி அமைச்சர் கவனம் செலுத்துவதுடன், இந்த ஆண்டு இரு நாடுகளும் இராஜதந்திர உறவை நிறுவியதன் 70ஆவது ஆண்டு நிறைவை குறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.