சன்ஜு சம்சனின் கன்னி சதத்தின் உதவியோடு தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் சர்வதேச போட்டியில் 78 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி தொடரை 2–1 என கைப்பற்றியது.
பார்ல் நகரின் போலன்ட் பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணிக்கு முதல் வரிசையில் வந்த சன்ஜு சம்சன் கைகொடுத்தார்.
ஒரு முனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அவர் 114 பந்துகளில் 6 பெளண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 108 ஓட்டங்களை பெற்றார். மத்திய வரிசையில் திலக் வர்மா அரைச் சதம் ஒன்றை குவித்தார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு ஆரம்ப வீரர் டோனி டி சேர்சி 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தபோதும் வேறு எந்த வீரரும் கைகொடுக்கவில்லை. இதனால் அந்த அணி 45.5 ஓவர்களில் 218 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
சிறப்பாக பந்துவீசிய அர்ஷீப் சிங் 9 ஓவர்களில் 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு அவேஷ் கான் மற்றும் பந்துவீச்சிலும் சோபித்த வொஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.