செக் குடியரசில் உள்ள சார்ல்ஸ் பல்கலையில் 24 வயது மாணவர் ஒருவர் 14 பேரைச் சுட்டுக்கொன்றுள்ளார். பின்னர் அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வியாழனன்று (21) நடந்த இந்த சம்பவத்தில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் செக் குடியரசில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமாக அது கருதப்படுகிறது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் சிலர் அந்த மாணவரின் சகாக்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு இன்று (23) தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது. அரசாங்கக் கட்டடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். கொல்லப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் அந்த மாணவர் தமது தந்தையைச் சுட்டுக்கொன்றதாக பொலிஸார் நம்புகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அந்த நகரில் உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்தினர். ஆயுதங்கள் ஏந்திய பொலிஸார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.