தேசிய ஜனசபா செயலகத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஜனசபா வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட முன்னோடி ஜனசபா தேசிய வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலகமும் உள்வாங்கப்பட்டுள்ளது.
இதன்படி இவ்வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட முன்னோடி வேலைத்திட்டத்தில்(Pilot Project) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் 9 ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவு (பொலிவேரியன் கிராமம்) தெரிவு செய்யபட்டுள்ளது. இதற்கான செயற்குழுவில் 25 பேர் அங்கம் வகிக்கவுள்ளனர். இக்குழுவில் இப்பிரிவிலுள்ள இளைஞர் குழுக்கள், கிராம அபிவிருத்தி மற்றும் மகளிர் அபிவிருத்திச் சங்கங்கள், சமுர்த்தி சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இந்நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பொலிவேரியன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனசபா திட்டத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான கண்கானிப்பு அதிகாரி ரவீந்திர டீ.சில்வா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சி.முஹம்மட், திட்டமிடல் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள செயற்குழு உறுப்பினர்களுக்கான அறிவூட்டல் நிகழ்வொன்றும் இங்கு இடம்பெற்றது.
அஸ்ஹர் ஆதம்…
(கல்முனை குறூப் நிருபர்)