பாடசாலை மாணவர்கள் போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை பொலிஸார் கைது செய்தனர்.
28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதிவுத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் இவர்கள், அடுத்த வருடம் திருமண நிகழ்வை நடாத்த திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் பட்டதாரிகள் என்பதோடு, பணம் சம்பாதிப்பதற்காக ஆபாச வீடியோக்களை தயாரித்து இணையத்தில் வெளியிட்டதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரூபாவை சம்பாதித்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்ட போது, ஆபாச வீடியோக்களை தயாரிக்கப் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் கணனி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்படுள்ளன.
அத்துடன் படபிடிப்பிற்காக பயன்படுத்திய பாடசாலை சீருடைகள், டைகள் மற்றும் பிற பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நீண்ட காலமாக இந்த மோசடியை மேற்கொண்டு வரும் சந்தேகநபர்கள் ஏற்படுத்திய இணைய கணக்கில் சுமார் 4,400 பயனாளர்கள் இருப்பதாகவும், அவர்களின் வீடியோக்கள் சுமார் 8.7 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், ஆண் சந்தேகநபர் பிலிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. பிலிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தம்பதியொருவர் ஆபாசமான காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்ததாக கடுகன்னாவ பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சமிந்த குணரத்னவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.