வடமேல் மாகாண ஆளுநர் அலுவலகமும், புத்தளம் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த சிலாபம் தேர்தல் தொகுதிக்கான விஷேட நடமாடும் சேவையொன்று சனிக்கிழமை (09) மாதம்பை கருக்குவ சுகதானந்த மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன உட்பட ஆளுநர் செயலக அதிகாரிகளும், இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் உட்பட அரசியல் பிரமுகர்களும், புத்தளம் மாவட்ட செயலக அரச திணைக்கள பிரதானிகளும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது, சுவர்ண பூமி காணி உறுதிகள் வழங்கப்பட்டதுடன், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் அமர்வும் , தொழில் முனைவோருக்கான உபகரணங்களும் வழங்கப்பட்டன.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கான புலமை பரிசுகள், விசேட தேவையுடையவர்களுக்கான உபகரணங்கள், வயோதிபர்களுக்கான மூக்கு கண்ணாடிகள், ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகள், வறிய குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் , கர்ப்பிணி பெண்களுக்கான போஷாக்கு உணவுகள் என்பனவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்