பேருவளை சீனன்கோட்டை மத்ரஸதுல் ஸலாஹ் அரபிக்கல்லூரி வளவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஐந்து மாடிகளைக்கொண்ட கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (10) காலை 9.30 மணிக்கு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த புதிய மாடிக்கட்டடத்தில் தனியான ஹிப்ழ் பிரிவு, பகுதிநேர வகுப்புகளில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகள், மத்ரஸாவின் பிரதான மாநாட்டு மண்டபம் என்பவற்றை உள்ளடக்கிய புதிய வகுப்பறை கட்டட நிர்மாணப்பணிகளுக்கே நேற்றைய தினம் அடிக்கல் நடப்பட்டமை விசேட அம்சமாகும். அண்மையில் வபாத்தான ஸலாஹ் மத்ரஸாவின் நிர்வாக சபைத்தலைவர் மர்ஹூம் எம்.எஸ்.எம். ரஸ்வி ஹாஜியாரினால் மத்ரஸாவிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 100 பேர்ச் காணியிலேயே ஐந்து மாடிகளைக்கொண்ட புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இக்கட்டடத்திற்கான முதலாவது அடிக்கல்லினை சீனன்கோட்டை பள்ளிச்சங்கத்தலைவர் ஏ.ஆர்.எம். முக்தார் ஹாஜியார் மற்றும் மர்ஹூம் ரஸ்வி ஹாஜியாரின் புதல்வர் ரிபாகத் ரஸ்வி ஆகியோர் நட்டி வைத்தனர். இந்நிகழ்வில் மத்ரஸா அதிபர், உஸ்தாத்மார்கள், மத்ரஸா நிர்வாக சபை உறுப்பினர்கள், சீனன்கோட்டை பள்ளிச்சங்க நிர்வாகிகள், மாணவர்கள், ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அஜ்வாத்பாஸி