இலங்கையில் டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகத் தெரிவித்த சுவாசநோய் மருத்துவர் ஆஷா சமரநாயக்க, இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சல் காணப்படுமாயின் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இருமல் மற்றும் சளி டெங்குவின் அறிகுறிகளாக இருக்கலாமெனவும், அவர் தெரிவித்தார்.
இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சல் இருந்தால், இது பொதுவான வைரஸ் காய்ச்சலென்று பலர் கருதுவதாகவும் ஆயினும், டெங்கு வைரஸ் தொற்றிய பின்னர் இந்த அறிகுறிகள் தோன்றக்கூடுமெனவும், அவர் சுட்டிக்காட்டினார்.
கடுமையான காய்ச்சல் மற்றும் மூட்டுவலி டெங்குவின் பொதுவான அறிகுறிகளாயினும், இருமல் மற்றும் சளி புதிய அறிகுறிகளல்லவெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
டெங்கு தவிர்ந்த ஏனைய வைரஸ் நோய்களும் இந்நாட்களில் பரவலாக உள்ளது. ஆகையால், பொதுமக்களை மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும், மருத்துவர் கேட்டுக்கொண்டார்.