உணவுப் பொதிகளுக்கா லன்ஞ் சீற் (Lunch Sheet ) பாவனையை தடை செய்யவும் அதற்கு பதிலாக மாற்றீடுகளை அறிமுகப்படுத்துவதற்கும் 06 மாதங்கள் அவகாசம் வழங்குவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்
குழு பரிந்துரை செய்துள்ளது. இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சிச் செயல்முறையை மேம்படுத்துதல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் (05) ஆம் திகதி கூடியது. இதன்போதே இவ்வாறு கால அவகாசம் வழங்கியுள்ளது. சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை சுங்கம், கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்களம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தன. இதன்போது, நாட்டில் லன்ஞ் சீற்கள் (Lunch Sheet) பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், அவற்றில் காணப்படும் தலேட் எனும் புற்றுநோய்க் காரணி மனித உயிர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. அதற்கமைய, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, லன்ஞ் சீற்கள் பயன்படுத்துவதை தடை செய்தல் மற்றும் மாற்றீடுகளை அறிமுகப்படுத்துவதற்கு 06 மாதங்கள் அவகாசம் வழங்குவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரை வழங்கியது. உலகில் எந்த நாட்டிலும் லன்ஞ் சீற்கள் பயன்படுத்தப் படுவதில்லையென சுட்டிக்காட்டிய சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகள், லன்ஞ் சீற்களை பயன்படுத்தாமல் இருப்பதன் முக்கியத்துவத்தையும் குழுவில் சுட்டிக்காட்டினர்.
சுற்றாடல் சட்டத்தைத் திருத்துவதற்கு தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குழுவில் கருத்திற் கொள்ளப்பட்டதுடன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு விசேட விடயங்கள் முனவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.