அவரது சகல தொடர்புகளும் சிங்களவர்களுடனே!
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள 09 பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களை புலிகள் என கூறுவதற்கு உரிமையுண்டு. எனினும் சாணக்கியன் எம்.பிக்கு இதற்கான அருகதை இல்லையென இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். கூட்டமைப்பின் ஒன்பது எம்பிக்களுக்கும் தங்களை புலிகள் என்று தெரிவிப்பதற்கும் புலிகள் பற்றி பேசுவதற்கும் உரிமையுண்டு. எனினும், சாணக்கியன் எம்.பி.க்கு அந்த உரிமை கிடையாது. ஏனெனில் அவரின் அனைத்து நடவடிக்கைகளும் உறவுகளும் சிங்களவர்களுடனேயே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வெளிவிவகார அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சபையில் உரையாற்றிய சாணக்கியன் எம்.பி. ”நான் ஏதாவது கூறினால் என்னை புலி என்று கூறுவீர்கள்”என்று குறிப்பிட்டார். அவருக்கும் புலிகளுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருந்தபோது அவரிடம் சென்று, அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நியமனம் பெற்றவர் அவர்.
அது மட்டுமல்ல. இவர் கண்டியிலுள்ள சிங்களப்பாடசாலையிலேதான் கல்வி கற்றார் . சிங்கள வீடுகளில்தான் உணவருந்தினார். சிங்களப் பெண்கள்தான் அவரின் தோழிகள். அவர் ஒரு சிங்களப் பெண்ணையே திருமணமும் செய்யவுள்ளார்.
எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள 09 எம். பிக்களுக்கு மட்டுமே புலிகள் பற்றி பேச உரிமையுண்டு.ஏனெனில் அவர்கள் புலிகளுடன் இருந்தவர்கள். இந்த சாணக்கியனுக்கு தன்னை புலி என்று கூற எந்த தகுதியோ அல்லது உரிமையோ கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்