கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் 59 வயதுடைய பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை விடுதியொன்றில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைதுசெய்துள்ளனர். இப்பெண்ணிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, கொழும்பிலிருந்து சென்ற இலஞ்ச ஒழிப்புக்குழுவினரால் நேற்று முன்தினம் (22) இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். கல்முனையைச் சேர்ந்த இப்பெண், ஏற்கெனவே குற்றச்செயலொன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.
இப்பெண் மாதத்தில் ஒருநாள் நீதிமன்றம் சென்று கையொழுத்திட்டு வருவதால், அங்கு கடமையாற்றி வரும் கல்முனை பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த இப்பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் அப்பெண்ணை அணுகி பாலியல் இலஞ்சம் கோரியுள்ளர். இது தொடர்பாக கொழும்பிலுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இப்பெண் முறைப்பாடு செய்ததையடுத்து, அவர்களின் வழிகாட்டலில் கல்முனை கடற்கரைப் பகுதியிலுள்ள உல்லாச விடுதிக்கு பெண்ணை செல்லுமாறு கூறிய இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினர். அங்கு மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது, பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரியை விடுதிக்கு வருமாறு பெண் அழைத்ததுடன், பொலிஸ் அதிகாரி விடுதி அறைக்கு சென்ற போது, அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் பொலிஸ் அதிகாரியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, அவரை 28 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரியை கொழும்புக்கு இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் அழைத்துச் சென்றனர்.