தந்திரிமலை, களுவில பிரதேசத்தில் ஒருவர் தனது பயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்காக போட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி கொம்பன் யானையொன்று நேற்று (23) பலியாகியுள்ளதாக, தந்திரிமலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பயிர்ச்செய்கை செய்துவந்த தந்திரிமலை களுவில பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடையவர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் ஒன்பது அடி உயரமுள்ள 35 வயதுடைய யானையொன்றே மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாகவும், வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்தது.
இந்த யானையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை, அநுராதபுரம் வனவிலங்கு வலயத்துக்கு பொறுப்பான கால்நடை வைத்தியர் சந்தன ஜயசிங்கவால் நடத்தப்படவுள்ளது.
இந்த யானையின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தனது மா உள்ளிட்ட மேட்டுநிலப் பயிர்களை யானைகளிடமிருந்து பாதுகாக்கவே இந்த மின்சார வேலியை அமைத்ததாக, அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
தந்திரிமலை, களுவில பிரதேசம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் சுற்றித்திரிந்த இந்த யானை, அப்பிரதேசத்திலுள்ள பயிர்களை நாசம் செய்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியதாகவும், இம்மக்கள் மேலும் தெரிவித்தனர்.