அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 198 புள்ளிகளைப்பெற்ற ஐவரில் ஒருவரான அநுராதபுரம் சாந்த ஜோசப் வித்தியாலயத்தின் நவாங்க ஹஸ்ராஜ் பொன்சேகா என்ற சிறுவனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கும் பரிசில்கள் வழங்கி வைப்பதற்கும் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் (21) அந்த வித்தியாலயத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
குறித்த சிறுவனுக்கு வடமத்திய மாகாண கல்வி அபிவிருத்தி நிதியத்தின் மூலம் ( 200,000) ரூபா பெறுமதிமிக்க பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வடமத்திய மாகாண பாடசாலை மாணவர் ஒருவர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் நிலைக்கு வெற்றிபெற்றமை இதுவே முதற்தடவையாகும்.
மாகாண சபை என்ற ரீதியில் வடமத்திய மாகாண சிறுவர்களின் கல்வி நடவடிக்கையினை விருத்தி செய்வது எமது இலக்காகும்.
ஆசிரியர்கள், பெற்றோர்களைப் போன்று மாகாண கல்வி அமைச்சு என்ற அடிப்படையில் முடியுமான சகல உதவிகளையும் வழங்குவோம். இந்த சிறுவன் பாடசாலைக்கு, மாவட்டத்திற்கு, மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்த சிறுவனின் கல்வி நடவடிக்கைகளுக்கு மாகாண சபை சகல உதவிகளையும் வழங்கும் என ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்