இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் (ICC) மேன்முறையீடு செய்ய எதிர்பார்ப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
விளையாட்டு அமைச்சில் இன்று (11) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இதன் போது கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கை கிரிக்கெட் தலைவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. கொழும்பு ஹோட்டல் அறையில் கிரிக்கெட் தடை செய்யப்பட்ட மகிழ்ச்சியில் ஒரு சிலர் மது அருந்தி மகிழ்ந்துள்ளனர். நாட்டிற்கு துரோகம் செய்யும் ஒரு குழு உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
கிரிக்கட் நிறுவனத்திற்கு எல்லையற்ற அதிகாரம் எப்படி கிடைத்தது என்று எனக்கு ஒரு கேள்வி உள்ளது. நாம் ஐசிசியிடம் பேசினோம் ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. இது எமக்குத் தெரிவிக்காமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் குற்றச்சாட்டுகளையாவது அனுப்பியிருக்க வேண்டும் அவர்கள் அதனை மேற்கொள்ளவில்லை.
அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட குழு மீது விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடர்பில் நாம் திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். எந்த முடிவு எடுத்தாலும் நாம்அதை மதிப்போம். என அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத் தடை நீங்கினால் அர்ஜுன சிறிது நாட்களுக்கு கிரிக்கெட்டை சரி செய்வார் என அவர் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள அனைத்து கிரிக்கெட் சங்கங்களையும் எனக்கு உள்ள அதிகாரத்தின் மூலம் கலைப்பேன். சில சங்கங்கள் வாழ்நாள் தடைக்கு உட்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டிற்கு என்ன நடந்தாலும், சில வஞ்சக மற்றும் ஊழல் சமூக ஊடகங்கள் உள்ளன, பணம் கொடுத்தால், அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பார்கள், அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றார்.