மாத்தளையில் பிறந்து மலையக எழுத்தாளராக அறிமுகமாகி, அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்து காத்திரமான படைப்புகளால் புலம்பெயர் எழுத்தாளர்களில் முக்கியமானவராக திகழும் மாத்தளை சோமு, தமிழகத்தின் ஆனந்தவிகடன், குமுதம், காமதேனு, தாமரை, இந்தியா டுடே தமிழ், புதிய பார்வை ஆகிய இதழ்களிலும் கலைமகள், இந்து திசை தமிழ், ஆனந்தவிகடன், அமுதசுரபி ஆகியவற்றின் தீபாவளி மலர்களிலும் தமது படைப்புகளால் புகழ்பெற்றுள்ளார்.
இவருக்கு மலேசியாவில் குறிப்பிடத்தக்க தமிழ் வாசகர்கள் இருக்கிறார்கள். இவரின் அனைத்து நூல்களும் அங்கு வெளியாகியிருக்கின்றன. மலேசிய நண்பன், மக்கள் ஓசை ஆகிய ஞாயிறு இதழ்களில் தொடர்கட்டுரைகள், கதைகள் எழுதியிருக்கிறார் இவர்.
இவரின் எழுத்துக்களத்தை மூன்றாகப் பார்க்கலாம். ஒன்று மலையகத்தைப் பின்புலமாகக் கொண்ட சிறுகதைகள், நாவல்கள்.
இரண்டு புலம்பெயர்ந்த தமிழரின் வாழ்வு குறித்த மற்றும் ஈழத்தின் போர்ச்சூல் குறித்த சிறுகதைகள்.
மூன்றாவது தமிழகத்தைப் பின்னணியாகக் கொண்ட சிறுகதைகள், நாவல்கள்.
மூன்று வெவ்வேறு திசைகளில் வாழும் மக்களையும் தமது படைப்புகளில் வெளிக்கொணர்ந்த இவரை லண்டனைச் சர்ந்த இலக்கிய விமர்சகர் பேராசிரியர் மு.நித்தியானந்தம், மாத்தளை சோமுவின் 100 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பின் முன்னுரையில் ‘மலையகத்தின் திரிவேணி சங்கமம்’ என்று எழுதியிருக்கின்றார்.
‘தோட்டக்காட்டினிலே’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய (அமரர்) பேராசிரியர் கைலாசபதி ‘ஒரு கமராவின் மூலம் பார்ப்பது போல் அந்த ஜன்னல் காட்சிகள் அழகாக இருந்தன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய ஜன்னல் காட்சிகளை, வாழ்க்கைகக் கூறுகளை, உயிரோவியங்களை மாத்தளை சோமுவின் படைப்புகளில் காணலாம். தமிழகம் இவருக்கு மூதாதையர் பூமியானபோதும் அவ்வப்போது அங்கு சென்று தங்கிப் போயிருக்கிறார். இக்காலப்பகுதியில் இவருக்கு ஜன்னல் காட்சிகள் கண்களில் பட்டிருக்கின்றன. அதனை உள்வாங்கியதில் பல சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றை எழுதினார். அவ்வாறு எழுதப்பட்ட ஒன்றுதான் ‘மூலஸ்தானம்’ என்ற நாவல்.
அந்நாவலுக்கு முன்னுரை வழங்கிய இந்திராபார்த்தசாரதி ‘தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சினையை மையமாக வைத்துக்கொண்டு நாவல் எழுதுவது என்பது கத்திமுனையில் நடப்பதுபோல் மிகக் கடினமான பயிற்சி. மாத்தளை சோமு இதை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார்’ என்று எழுதியிருக்கிறார். அவரின் பாரட்டை உறுதி செய்வதைப் போன்று இலங்கையில் ‘விபதி’ என்று அழைக்கப்படும் ‘சுதந்திர இலக்கியச் சங்கம்’ என்ற தமிழ், சிங்களப் படைப்புகளுக்குப் பரிசு வழங்கும் அமைப்பு 1998இல் வெளிவந்த சிறந்த நாவல்களுக்கான விருதை வழங்கியது.
தற்போது தமிழகத்தின் கிராமங்களில் குலதெய்வமாக வணங்கி வரும் ஐயனார் கோவில் குறித்தும் அக்கோயில் வழிபாடு மற்றும் காவு கொடுத்தல் குறித்தும் இவர் எழுதியதே ‘ஐயனார் ஆடு’ என்ற நாவலாகும். உயிரைக் கொல்வது – பலி கொடுப்பது சரியா என்பது பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்கத் தெரியாத ஒரு சிறுவன், அவனுக்காக நேர்த்தி செய்யப்பட்ட ஓர் ஆட்டோடு கொண்ட நட்பு பற்றிய அவனுடைய எண்ணங்களே நாவலாக விரிந்துள்ளன.
‘பலி கொடுத்தல்’ என்ற ஒற்றைச் சொல்லை மையமாக வைத்தே நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
இந்நாவல் ஒரு திரைப்படமாக்கும் கதையைக் கொண்டது. 2021இல் வந்த சிறந்த நாவல்களில் ஐயனார் ஆடும் ஒன்றாகும்.