கொழும்பு – புத்தளம் ரயில் சேவைகள் நேற்று திங்கட்கிழமை முதல் பங்கதெனிய வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தளம் – கொழும்பு ரயில் மார்க்கத்தின் பத்துளு ஓயா பிரதேசம் வெள்ளத்தினால் மூழ்கியதன் காரணமாகவே மேற்படி கொழும்பு – புத்தளம் வரையிலான ரயில் சேவைகள் பங்கதெனிய ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பத்துளு ஓயா ரயில் நிலையம் மற்றும் ரயில் தண்டவாளம் அதனை அண்டிய ரயில் தண்டவாளம் பிரதான வீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் காணப்படுகிறது.
குறித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறைவடைந்தால் ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என புத்தளம் புகையிரத நிலையத்தின் கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.
புத்தளத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை நாளாந்தம் நான்கு தடவைகள் ரயில் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
புத்தளத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கும், காலை 7.40 மற்றும் 11.55 மாலை 5.10 மணியளவில் குறித்த ரயில் சேவைகள் கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொள்கின்றன.
இவ்வாறு திடீரென ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டமையால் நாளாந்தம் ரயிலில் போக்குவரத்து செய்யும் புத்தளம் , பாலாவி, மதுரங்குளி மற்றும் முந்தல் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்