இந்துக்கோயில்களை உடைத்து திருடிய பிரதான சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் குஷிகா குமாரசிரி உத்தரவிட்டார்.
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள 21 இந்துக்கோயில்களை உடைத்து, உண்டியல் பணம் மற்றும் தெய்வங்களுக்கு அணியப்பட்ட தங்கநகைகளை திருடியமை தொடர்பாக சீ.சீ.ரீ.வி. கமெராவின் உதவியுடன் இச்சந்தேகநபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்தனர்.
அத்துடன், இச்சந்தேகநபர் திருடிய தங்கநகைகளை விற்பனை செய்த போது, அவற்றை கொள்வனவு செய்து உதவிய மேலும் இரு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
இம்மூவரையும் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (23) முன்னிலைப்படுத்திய போது, பிரதான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, பிரதான சந்தேகநபர் திருடிய தங்கநகைகளை கொள்வனவு செய்து உதவிய தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த இருவரையும் நிபந்தனை அடிப்படையில் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான
சரீரப்பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
(ஆ.ரமேஸ்)