அரச நிறுவனங்களை மறுசீரமைப்புக்ம் வேலைத் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான வேலைத் திட்டம் சாத்தியமானதாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவ்வேலைத் திட்டத்தை விரைவுபடுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக் கடன் ஒத்துழைப்பு வேலைத் திட்டம் சம்பந்தமாக தேவையான பேச்சுவார்த்தைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை கொள்ளும் நிலை தற்போது உருவாகியுள்ளது. பொருளாதாரத்தை நிலையாக மறுசீரமைக்க பாராளுமன்றமூடாக ஒருசில சட்டத்திருத்தங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால இலக்குகளுக்கு அப்பாற்பட்ட வகையில் நிலையான இலக்குகளை நாம் எதிர்பார்த்துள்ளோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையுடன் இரண்டாம் கட்ட ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை கடந்த மாதம் இடம்பெற்றது.
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, கடன் நிலைபேறான தன்மை, கடன் காப்புறுதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் 93 நிபந்தனைகளை 2024 டிசம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
2023 ஆகஸ்ட் மாதத்துக்குள் 51 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்துக்குள் 47 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன .
எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் ஏனைய நிபந்தனைகள் தொடர்பில் சாதகமான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)