கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக ஏற்பாட்டில் வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இராகலை, சென்லெணாட்ஸ், புரூக்சைட் மற்றும் சூரியகாந்தி ஆகிய தோட்ட மக்களுக்கு இரண்டு நாள் நடமாடும் சேவை நேற்று (17) காலை இராகலை சானிகா மண்டபத்தில் ஆரம்பமானது.
இராகலை, சென்லெணாட்ஸ், புரூக்சைட் மற்றும் சூரியகாந்தி ஆகிய தோட்டங்களின் மக்கள் தங்களது ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக்கொள்ள எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை காணும் வகையில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் இந்த நடமாடும் சேவையை ஒழுங்கு செய்திருந்தது.
இந்த நடமாடும் சேவையில் ஊழியர் சேமலாப நிதியினை பெற்றுக்கொள்ள தேவையான அடிப்படை ஆவணங்களில் ஏற்பட்ட பிரச்சிணைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் தீர்வு காணப்பட்டதுடன் ஆவண குறைபாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இதன்போது இந்த நடமாடும் சேவையில் மத்திய வங்கி அதிகாரிகள், ஊ.சே.நிதி திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் கொழும்பு, கண்டி, நுவரெலியா, வலப்பனை பிரதேச தொழில் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர்கள் உட்பட திணைக்கள பதிவாளர்கள் மற்றும் தோட்ட முகாமைத்துவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த முதல் நாள் நடமாடும் சேவையில் இராகலை மற்றும் சென்லெணாட்ஸ் தோட்டங்களில் இருந்து ஊ.சே.நிதி தொடர்பில் பிணக்குகளை தீர்த்து பயன்பெற 150 க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்து பயன் பெற்றனர்.
இன்றைய தினம் (18) இரண்டாம் நாள் நடமாடும் சேவையில் சூரியகாந்தி மற்றும் புரூக்சைட் தோட்ட மக்கள் சமூகமளிக்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஆ.ரமேஸ்