ல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் நூலக வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் இல்லாத நிலைமை தொடர்ச்சியாகக் காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் மாங்குளம் புகையிரத நிலையத்தினர் தொடர்பு கொண்டு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் உதவிகள் கிடைத்துள்ளன. இதற்கமைய பல்வேறு விதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் புகையிரத நிலையத்தைச் சூழவுள்ள பகுதிகளில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று அங்கு அழகுபடுத்தல் வேலைகளும் மரநடுகைத் திட்டங்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக நேற்றுமுன்தினம் 15 ஆம் திகதி பல்வேறு நலத்திட்டங்கள் அங்கு முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில் B .B .K நிறுவனத்தின் அனுசரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் நூலகத்திற்கான அலுமாரி வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட நிலையில், ‘சிறகுகள்’ அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் இந்த நூலகத்திற்கான நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. அந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டதோடு, ‘கிரீன் லேயர்’ அமைப்பினால் புகையிரத நிலைய வளாகத்தில் 50 பயன் தரும் மரக்கன்றுகள் நடுகை செய்யும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
புகையிரத நிலைய அதிபர் க.கலைவேந்தன் விடுத்த கோரிக்கையின் பேரில் புகையிரத நிலைய அதிபர் க.சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், யாழ் புகையிரத நிலைய அத்தியட்சகர் சுரேந்திரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன், மருத்துவர் க. உதயசீலன், B .B .K கணக்காய்வு நிறுவனத்தின் வவுனியா கிளை முகாமையாளர் சஜிந்தன், கிரீன் லேயர் அமைப்பின் பணிப்பாளர் சசிக்குமார், சிறகுகள் அமைப்பின் சார்பில் சஜீவன், புகையிரத நிலைய அதிபர் சி.அனுசியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.