கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூப்பனை தோட்டத்தில் தேயிலை மலையில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த நாட்டுவெடி வெடித்து 52 வயதுடைய பெண் தொழிலாளி ஒருவர் காயங்களுக்குள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவம் இன்று (16) காலை பூப்பனை தோட்ட விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நூறு மீட்டர் தூரத்தில் காணப்படும் வீதியின் மேற்பகுதியில் உள்ள தேயிலை மலையில் இடம்பெற்றுள்ளதாக கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோகில ஆரியதாஸ தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளி தனக்கு ஒதுக்கப்பட்ட தேனீர் இடைவேளையின் போது தேனீர் அருந்திவிட்டு வெற்றிலை போடுவதற்கு தேயிலை மலையில் உள்ள கல் ஒன்றில் பாக்கு உடைக்க முற்பட்டபோது அக்கல்லுக்கு கீழ் இருந்ததாக கூறப்படும் நாட்டுவெடி வெடித்து காயங்கள் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் இவ்வாறு வெடித்தது நாட்டுவெடி என்று சொன்னாலும் இதில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இது தொடர்பாக பரிசோதனையையும், விசாரணையையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், பூப்பனை மேல்பிரிவு தோட்ட தேயிலை மலைகளில் அதிகமான காட்டு பன்றிகள் நடமாடுவதாகவும் இந்த வெடி பன்றிக்கு வைக்கப்பட்டதாகவும், இதனால் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.